திருவண்ணாமலை மலைச்சரிவு.. சடலங்கள் மீட்பு.. ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை
திருவண்ணாமலை மலைச்சரிவு.. சடலங்கள் மீட்பு.. ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை
கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் பெங்கள் புயல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது..
காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, புதுச்சேரி, மயிலாடுதுறை, திண்டிவனம், விழுப்புரம் விக்கிரவாண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் திருவண்ணாமலையில் நடந்த மலை சரிவு குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு இதோ….
திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Vijay request to CM Stalin regarding Fengal cyclone

