பணி (மலையாளம்) விமர்சனம்.. 4.5/5.. ஜொலிக்கும் ஜோஜூ ஜார்ஜ்
ஸ்டோரி…
கேரளாவில் திருச்சூரில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் அவரது 3 நண்பர்கள் பெரிய புள்ளிகளாக வலம் வருகிறார்கள்.. எந்த பிரச்சனை என்றாலும் காவல்துறையை நாடாமல் எந்த காரியத்தையும் சாதித்து வருகின்றனர்.. இவர்களுக்கு என்று பெரிய ரவுடி கூட்டமே திருச்சூரில் செயல்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வில்லன்கள் இருவரும் ஏடிஎம்மில் ஒரு கொலையை செய்து அசால்டாக தப்பி விடுகின்றனர்.. அதே நாளில் ஜோஜு ஜார்ஜ் மனைவி அபிநயாவை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பார்க்கும்போது அவர் மீது சபலம் ஏற்பட்டு அவரை சீண்டி விடுகின்றனர். இதனால் ஜோஜு அவர்களை அடித்து போட்டு விடுகிறார்.. எனவே ஜோஜுவை பழிவாங்க இரண்டு வில்லன்களும் திட்டம் போடுகின்றனர்.
அதன்படி அபிநயாவை கற்பழித்து விடுகின்றனர்.. அதன் பின்னர் ஜோஜுவுக்கும் வில்லன்களுக்கும் தொடரும் மோதல்தான் இந்தப் படத்தின் ஹைலைட் காட்சிகள்..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
தன் மனைவி மீது கை வைத்த இரண்டு வில்லன்களை பழிவாங்கும் ஹீரோவின் கதை தான் இது என்றாலும் படத்தின் மேக்கிங் ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைக்கிறது..
50 வயதான ஹீரோவுக்கு 25 வயதில் 2 வில்லன்களை காட்டி ஹீரோவை டம்மியாக்கி கிளைமாக்ஸ் காட்சியில் வேற லெவல் மாஸ் காட்டி இருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ்..
டூவீலரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் 2 வில்லன்களை காரில் சேசிங் செய்யும் ஜோஜூவின் மேக்கிங் அதிர வைக்கிறது..
அதற்குப் பக்க பலமாக இருந்து கேமராவில் பல வண்ண ஜாலங்களை காட்டி இருக்கிற ஒளிப்பதிவாளர்.. அடடா திருச்சூர் இரவில் இவ்வளவு அழகாக இருக்குமா.? என ஏங்க வைக்கிறார்..
நிச்சயம் தமிழ் இயக்குனர்களும் & தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களும் இந்த பணி படத்தை பார்த்து அவர்களின் பணியை இன்னும் சிறப்பிக்கச் செய்யலாம்..
கதை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதல்ல.. மனைவி மீது ஒருவன் கை வைத்தால் கணவன் என்ன செய்வான் என்ற சிறுகதையை எடுத்து அதை படமாக்கி அதில் நாயகனாகவும் நடித்த ஜோஜூவை நிச்சயம் தமிழ் சினிமா பாராட்டி வரவேற்கலாம்.. இவர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்… தனக்கேற்ற கதையைத் தேர்ந்தெடுத்து அதில் தானே இயக்குனராகவும் நடிகராகவும் ஜொலித்திருக்கிறார்..
நாடோடிகள், ஈசன், குற்றம் 23 உள்ளிட்ட பல படங்களில் நம்மைக் கவர்ந்த அபிநயா இந்த படத்தில் நாயகியாக கண் கலங்க வைத்திருக்கிறார்.. இவரை வில்லன்கள் கற்பழிக்கும் காட்சி தாய்மார்களை கண்கலங்க வைக்கும்.
அடடா இப்படி 2 சிறு வயது வில்லன்கள் தமிழ் சினிமாவில் இல்லையே என ஏங்க வைக்கிறார்கள் சாகர் சூர்யா மற்றும் சஞ்சு.. வில்லன் என்றால் நீண்ட தாடி.. நீண்ட தலை முடி.. மிரட்டலான தேகம்.. உயரம் என எந்த பார்முலாவும் வேண்டாம்.. மிரட்டலான நடிப்பு போதும் என தெறிக்க விட்டிருக்கிறார்கள்.
வில்லன்களை ஹீரோ கொல்வதற்குள் முன்னர் நாமே கொன்றுவிடும் என்ற எண்ணத்தை நமக்கு விதைக்கும் விதத்தில் நடிப்பில் அதிர வைத்திருக்கின்றனர்.
பாடல்களை கதையுடன் நகர்த்தி இருப்பது சிறப்பு.. பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்.. ஒவ்வொரு காட்சியும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.. எந்த காட்சியிலும் நாம் செல்போனை கையில் எடுத்து விடக்கூடாது என்பது போல ஒவ்வொரு காட்சியும் இயக்குனர் நகர்த்தி இருப்பது இந்தப் பணி மீதான எதிர்பார்ப்பை எகிற செய்கிறது..
தன் வயதுக்கு ஏற்ப மூன்று நண்பர்கள்.. அவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள்.. தன் தங்கையை நண்பனுக்கு கொடுத்து அதற்குள் ஏற்படும் உறவுகள்.. தன் தாய்.. காவல்துறை அதிகாரிகள் என அனைத்தையும் கலந்து ஒரு திரில்லர் படத்தில் குடும்ப செண்டிமெண்ட்டையும் ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கிறார்..
படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் எதிர்பாராத ஒன்றாகும்.. அந்தக் காட்சியை பார்க்கும் போது இந்தக் கொடூர வில்லன்களுக்கு சரியான தண்டனை என்ற எண்ணத்தை வரவைக்கிறார் டைரக்டர் ஜோஜு ஜார்ஜ்..
இதற்கு முன்பு பாடகராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து அதில் ஜொலித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல
Pani Malayalam movie Tamil Review


